Last Updated : 25 Feb, 2019 08:20 AM

 

Published : 25 Feb 2019 08:20 AM
Last Updated : 25 Feb 2019 08:20 AM

திருவள்ளூர் அருகே சேவல் சண்டை போட்டி: 2,000-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பு

திருவள்ளூர் அருகே களாம்பாக்கம் மற்றும் தங்கானூர் பகுதியில் 2 நாட்கள் நடைபெற்ற சேவல் சண்டை போட்டிகளில், தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. இதில் இலங்கையைச் சேர்ந்த சேவல்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

வீரத்தை வெளிப்படுத்தும் சேவல் சண்டை தமிழகத்தில் பிரசித்திப் பெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இந்தப் போட்டிகளில் சேவல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சூழல், சூதாட்டப் புகார் உள்ளிட்ட காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேவல் சண்டை போட்டிகளை திருவள்ளூர் அருகே களாம்பாக்கம், தங்கானூர் பகுதிகளில் நடத்த, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர் சேவல் சண்டை போட்டி ஏற்பாட்டாளர்கள். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, களாம்பாக்கம் கிராமத்தில் 2 நாட்களாக சேவல் சண்டை போட்டிகள் நடைபெற்றன.

சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி, கால்நடை மருத்துவர்களின் பரிசோதனை, போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில், திருத்தணி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சேவல்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.

கிளிக்கொண்டை சேவல், வெள்ளைக்கொண்டை வெள்ளை சேவல், முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சேவல்கள் பங்கேற்றன.

இந்தப் போட்டிகளில் வென்ற சேவல்களின் உரிமையாளர்களுக்கு அரை கிராம் தங்க நாணயம், கேடயம், சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x