Published : 13 Sep 2014 10:37 AM
Last Updated : 13 Sep 2014 10:37 AM

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவதாகக் குற்றம்சாட்டி, ரஷ்யா மீது புதிதாக மேலும் சில பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

உக்ரைனில், அரசுக்கும் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஏப்ரல் முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை 3,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் மற்றும் ஆட்களை வழங்கி மோதலைத் தூண்டி விடுவதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் ரஷ்யா மீது குற்றம்சாட்டி வருகின்றன.

இக்குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்து வருகிறது. இருப்பினும் உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவதாகக் கூறி ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ரஷ்ய துணைப் பிரதமர் உட்பட 24 தனிநபர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கெனவே பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.

தற்போது மேலும் சில பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ராஸ்னெப்ட், அரசுக்குச் சொந்தமான எரிவாயுக் குழாய் மற்றும் போக்குவரத்து நிறுவனமான டிரான்ஸ்னெப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப் பட்டுள்ளன.

ரஷ்யாவின் பெரும் எண்ணெய் நிறுவனங்கள், நிதி மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான நிறுவனங்கள் மீது சொத்து முடக்கம், விசா தடை உள்ளிட்ட தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் செப்டம்பர் இறுதியில், உக்ரைனுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்த பிறகு இத்தடைகள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஹெர்மன் வான் ரோம்புய் கூறும்போது, “இந்த பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துவது, நிறுத்தி வைப்பது அல்லது தள்ளுபடி செய்வது என்பது, இம்மாத இறுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்த பிறகு கிடைக்கும் முடிவுகளைப் பொறுத்தது” எனத் தெரிவித்துள்ளார்.

பண மதிப்பு சரிவு

பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட பிறகு, ரஷ்ய ரூபிளின் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு வரலாறு காணாத வகையில் 37.72 ரூபிளாக வெள்ளிக்கிழமை குறைந்தது.

ஒபாமாவின் அறிவிப்பு

உக்ரைனில் ரஷ்யாவின் சட்டவிரோத தலையீட்டைக் கண்டிக்கும் விதத்தில், ரஷ்யா மீது கடுமையான தண்டனை நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைன் எல்லையைத் தாண்டி ரஷ்ய வீரர்கள் சுமார் 1,000 பேர் முகாமிட்டிருப்பதாக நேட்டோ மற்றும் உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ரஷ்யா கருத்து

இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் உக்ரைன் விவகாரம் அமைதியான முறையில் தீர்க்கப்படுவதற்கு எதிரான முடிவை ஐரோப்பிய யூனியன் எடுத்துள்ளது. உக்ரைனில் அமைதி ஏற்படுவதற்கு ஐரோப்பிய யூனியன் வாய்ப்பளிக்க வேண்டும் என ரஷ்ய வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றிய விமானங்களுக்கு ரஷ்ய வான்எல்லையில் பறக்க தடை விதிப்போம், மேற்கத்திய நாடுகளிலிருந்து பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்போம் என ரஷ்யா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x