Published : 02 Feb 2019 07:46 PM
Last Updated : 02 Feb 2019 07:46 PM
2011-க்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக் கட்டிடங்களின் திட்ட அனுமதியில் குறைபாடுகள் இருந்தால், நகரமைப்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பித்து, நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிக் கட்டிடங்களின் திட்ட அனுமதியை சமர்ப்பிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளை அறிவுறுத்தி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளிக் கல்வித் துறை அரசாணையை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ராஜா, 2011-ம் ஆண்டுக்கு பின்பு கட்டப்பட்ட பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று தான் கட்டப்பட்டுள்ளதால், அந்த கட்டிடங்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது என கூறி, அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதேசமயம், 2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் திட்ட அனுமதியில் குறைபாடுகள் இருந்தால், நகரமைப்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பித்து, நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால், இந்த அரசாணை பொருந்தும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி, அனைத்து இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பழனியப்பன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த உத்தரவு காரணமாக, 2011-க்கு முன் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பள்ளிகள், நகரமைப்பு துறை இயக்குனருக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மனுதாரர் சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், 2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் திட்ட அனுமதியில் குறைபாடுகள் இருந்தால், நகரமைப்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பித்து, நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT