Published : 23 Feb 2019 06:56 PM
Last Updated : 23 Feb 2019 06:56 PM

குறுக்கே புகுந்த மோட்டார் சைக்கிள்: திடீர் பிரேக் போட்டதில் ஆட்டோவிலிருந்து விழுந்த 3 மாத குழந்தை பலி

சென்னை அயனாவரத்தில் மோட்டார் சைக்கிள் குறுக்கே புகுந்ததால் மோதாமல் ஆட்டோவை திருப்பியபோது பெற்றோர் கண்முன்னே ஆட்டோவிலிருந்து கீழே விழுந்த 3 மாத ஆண்குழந்தை பலியானது.

வில்லிவாக்கம், சிட்கோநகரில் வசிப்பவர் வேலன் (35).  ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவரது மனைவி அர்ச்சனா (27). இவர்களுக்கு மூன்று மாதத்தில் யோகேஷ்ராஜ் என்கிற குழந்தை உள்ளது.

அயனாவரத்தில் உள்ள சகோதரியைப் பார்க்க அர்ச்சனா தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அவரை அழைத்துச் செல்ல அவரது கணவர் அயனாவரம் வந்துள்ளார். பின்னர் இரவு கணவருடன் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார்.

கொன்னூர் நெடுஞ்சாலையில் தாகூர் நகர் அருகே, இரவு, 10  மணியளவில், ஆட்டோ சென்றுக் கொண்டிருந்தபோது அவரது ஆட்டோவின் குறுக்கே  மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர்  தடுமாறி விழுந்துள்ளார். அவர் மீது மோதுவதை தவிர்க்க  வேலன் ஆட்டோவை வேகமாக திருப்பியுள்ளார்.

அப்போது ஆட்டோ வேகமாக குழுங்கியுள்ளது. ஆட்டோவின் பின்பக்கம் அமர்ந்திருந்த அர்ச்சனாவின் கையிலிருந்த குழந்தை யோகேஷ்ராஜ் தவறி சாலையில் விழுந்துள்ளது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  தாய் அர்ச்சனா லேசான காயங்களுடன் தப்பினார்.

குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயத்தைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.  உடனடியாக குழந்தையை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் எழும்பூரில் உள்ள, அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு குழந்தை யோகேஷ்ராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை யோகேஷ்வராஜ்  நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தது. விபத்து குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலானாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சாதாரண எதிர்பாரா சிறிய சம்பவத்தில் குழந்தை தவறி விழுந்து மரணமடைந்தது பெற்றோரையும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x