Published : 22 Feb 2019 06:41 PM
Last Updated : 22 Feb 2019 06:41 PM

கடலூர் குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளி ஆசிரியை படுகொலை: பள்ளிக்குள் நுழைந்துக் கத்திக்குத்து

கடலூர், குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளி ஆசிரியை எஸ்.ரம்யா (23) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காதல் தொந்தரவு கொடுத்து வந்த நபர் ஒருவர் இந்தக் கொலையைச் செய்ததாகத் தெரிகிறது.  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக் கடை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா(வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

 

காலை 8.30 மணியளவில் காயத்ரி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு வந்தார் ஆசிரியை ரம்யா. இவரை நீண்ட காலமாக பின் தொடரும் நபர் விருதகிரிகுப்பத்தைச் சேர்ந்த கே.ராஜசேகர் (24) என்று போலீஸார் தெரிவிக்கின்றனர், இவர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

 

ராஜசேகர் வகுப்பறைக்குள் நுழைந்து பெரிய கத்தியினால் ரம்யாவின் கழுத்தில் குத்தினார். சம்பவ இடத்திலிருந்து உடனடியாக அவர் தன் இருசக்கர வாகனத்தில் தப்பியதாகத் தெரிகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசிரியை ரம்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

பள்ளியின் துப்புரவு பணியாளர் முதலில் ரம்யாவின் உடலைக் கண்டு பள்ளி கரஸ்பாண்டண்ட் வி.ரங்கராஜனுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

 

போலீஸார் உடனடியாக வந்து ரம்யாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட போது, ஆசிரியை ரம்யாவை சில நாட்களாக பின் தொடர்ந்து வந்துள்ளார், ரம்யாவுக்கு ராஜசேகர் காதல் தொல்லை கொடுத்துள்ளார். ரம்யா பலமுறை மறுத்தும் விடாமல் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார் என்றனர்.

 

மேலும் இன்று காலை பள்ளி வேலைநேரத்திற்கு முன்பாகவே ரம்யா வந்தார். ஏன் வந்தார். ரம்யாவை கொலை செய்த வாலிபர் யார்? அவர் எதற்காக ரம்யாவை கொலை செய்தார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் குற்றவாளிகளின் உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா? என்று அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

இந்த கொடூர சம்பவம் குறித்து ரம்யாவின் தந்தை, ராஜசேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் குடும்பத்தினருடன் வந்து ரம்யாவை பெண் கேட்டதாகவும் அதற்குத் தாங்கள் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ராஜசேகர் தொடர்ந்து ரம்யாவை வழிமறித்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x