புல்வாமா தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு: தலா ரூ.20 லட்சம் நிதியுதவி; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

புல்வாமா தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு: தலா ரூ.20 லட்சம் நிதியுதவி; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
Updated on
1 min read

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இச்சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த பாதுகாப்புப் படைவீரர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஜி. சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சி. சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.

இந்த தாக்குதலில் உயிரிழந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.                                                          

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in