Published : 16 Feb 2019 11:43 AM
Last Updated : 16 Feb 2019 11:43 AM

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பியூஷ் கோயலுக்கு முன்பாகவே தொழிலதிபர் மகாலிங்கம் இல்லத்துக்குச் சென்ற ஓபிஎஸ்-ஈபிஎஸ்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசுவதற்காக சென்னை வந்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே நேரடியாக தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வியாழக்கிழமை சென்னை வந்தார். பாஜகவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல், தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்காக சென்னை வந்ததாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக, தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக அமைச்சர் பியூஷ் கோயல் மறைந்த தொழிலதிபர் மகாலிங்கத்தின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்குச் சென்றார். இந்தப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை இரவு 10.30 மணியில் இருந்து 12.45 மணி வரை நீடித்தது.

முன்னதாக, பியூஷ்கோயலிடம் அதிமுக தரப்பில் மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியானது.

ஆனால், பியூஷ்கோயல், தொழிலதிபர் மகாலிங்கம் இல்லத்திற்குச் செல்வதற்கு முன்பாகவே, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அங்கு சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பிறகு தான், அதிமுக சார்பாக தாங்கள் தான் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி அங்கு வந்துள்ளனர்.

சொல்லப்போனால், பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு, பியூஷ்கோயல்  உள்ளிட்ட பாஜகவினர், இரு தமிழக அமைச்சர்கள் மட்டுமே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

முதல்வரும் துணை முதல்வரும் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் கலைந்த பிறகே சென்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x