Published : 07 Feb 2019 12:05 PM
Last Updated : 07 Feb 2019 12:05 PM

‘சின்னதம்பி’ நடமாட்டம் குறித்து வரும் 11-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

'சின்னதம்பி' யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கற்சூளைகளை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கோவை மாவட்ட வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் வனத்துறையினரை திணறடிக்கும் சின்னதம்பி யானை ஊருக்குள் நுழைய, தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள செங்கற்சூளைகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை தான் காரணம் என முரளிதரன் தன் மனுவில் கூறியுள்ளார்.

மேலும் யானைகள் வழித்தடத்தில் இந்த செங்கற்சூளைகள் இருப்பதால், யானைகள் ஊருக்குள் நுழைந்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 'சின்னதம்பி' யானையை பிடித்து முகாமில் வைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, 'சின்னதம்பி'யின் நடமாட்டம் குறித்து வரும் 11-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x