Last Updated : 05 Feb, 2019 11:32 AM

 

Published : 05 Feb 2019 11:32 AM
Last Updated : 05 Feb 2019 11:32 AM

தந்தையை இழந்து உறவினர்கள் பராமரிப்பில் இருந்த சிறுமிகளை சித்ரவதை செய்த பெண் கைது

தந்தையை இழந்து உறவினர்கள் பராமரிப்பில் இருந்த சிறுமிகளை சித்ரவதை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த பெரியசாமி நகரைச் சேர்ந்த பெருமாள்-சித்ரா தம்பதியினருக்கு மீனாட்சி (9), சுபலட்சுமி (8) இரு மகள்கள் உள்ளனர். பெருமாள் இறந்துவிட, சித்ரா தனது இருமகள்களின் எதிர்காலம் கருதி, அவர்களை தனது உறவினரான சசிகலா என்பவரின் பாதுகாப்பில் விட்டுள்ளார். வருமானத்துக்காக சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளியாக அவர்கள் வேலை செய்துவந்துள்ளனர்.

இந்த நிலையில் சசிகலா இரு சிறுமிகளையும் பராமரிக்கிறேன் என்ற பெயரில், அவர்களை வீட்டு வேலைக்கு உட்படுத்தியதோடு சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் சிறுமிகளின் கை மற்றும் கால்களில் சூட்டுக் காயங்கள் இருப்பதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் கடலூர் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள், அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தி, இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து அவர்கள் அளித்தப் புகாரின் பேரில் திட்டக்குடி போலீஸார் சசிகலாவை நேற்று முன்தினம் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது தொடர்பாக திட்டக்குடி போலீஸாரிடம் விசாரித்தபோது, ‘‘சசிகலா கடந்த ஒருமாதமாக சிறுமிகளை வீட்டு வேலைக்கு உட்படுத்தி வந்ததோடு, அவர்களை பள்ளிக்கும் முறையாக அனுப்புவது கிடையாது. தனது ஆண் நண்பரான ஜோதிராமலிங்கத்தோடு சேர்ந்துகொண்டு பிறர் வீடுகளுக்கும் வீட்டு வேலை செய்ய அனுப்பி வைத்துவந்துள்ளதாகவும், அவ்வாறு செல்ல மறுக்கும்பட்சத்தில் சிறுமிகளை சித்ரவதை செய்துள்ளார்.

கடந்தவாரம் சுபலட்சுமி என்ற சிறுமிக்கு கையில் சூடு வைத்த நிலையில் சிறுமியின் உள்ளங்கை பழுத்து வீக்கமடைந்துள்ளது. இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் விசைரணை நடத்தி, சிறுமிகளை மீட்டு புகாரளித்தனர்.

புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் சசிகலாவை கைதுசெய்துள்ளோம். தலைமறைவாகியுள்ள ஜோதிராமலிங்கத்தை தேடிவருகிறோம். சிறுமிகள் தற்போது சமூக நல பாதுகாப்பு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் ’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x