Published : 19 Feb 2019 08:11 AM
Last Updated : 19 Feb 2019 08:11 AM

முன்னாள் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை; தண்டனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ் ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது கிருஷ்ணகிரியில் கள்ளச்சாராயத்தை எதிர்த்த போராட்டத்தின்போது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக கடந்த 1998-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுசிறை தண்டனை விதித்து கடந்த ஜன.7 அன்று தீர்ப்பளித்து. இந்த தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி பாலகிருஷ்ணரெட்டி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதால் கீழமை நீதிமன்றம் தண்டனையை வரும் பிப்.7-ம்தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைத்தது. இந்த தீர்ப்பின் காரணமாக பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை இழந்தார்.

இந்த 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்தும் தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும் பாலகிருஷ்ணரெட்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் பாலகிருஷ்ணரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தார். இதில் அவர் கீழமை நீதிமன்றத்தில் சரண் அடைய விலக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், அவர் சரண் அடைவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கையும் நீட்டித்து, இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x