Published : 22 Feb 2019 05:36 PM
Last Updated : 22 Feb 2019 05:36 PM
காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக பாஜக தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜன.27-ம் தேதி மதுரையில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசி பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மதுரை வந்தார். மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் புறப்பட்டுச் சென்ற அவர் பட்டணம்காத்தான் ஆத்மநாதசாமி நகரில் ராமநாதபுரம், சிவகங்கை, நாகபட்டினம் மக்களவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘தமிழகத்தில் பாஜக 5 தொகுதிகளில் மட்டும் போட்டியிடவில்லை. 40 தொகுதிகளிலும் பாஜகவே போட்டியிடுவதாக நினைத்து கட்சித் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். அதிமுக, பாமக என கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும், பாஜக தொண்டர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும். பிரதமர் மோடியை மீண்டும் பதவியில் அமர்த்துவதே நமது குறிக்கோள்.
திமுக, காங்கிரஸூம் தமிழகத்துக்காகவோ, நாட்டிற்காகவோ எதையும் செய்யவில்லை. மாறாக ஊழல் மட்டுமே செய்துள்ளன. அவர்கள் பதவியில் இருந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளனர். பிரதமர் மோடியை மீண்டும் தேர்வு செய்வது பாஜகவுக்காக அல்ல, மாறாக நாட்டுக்காக இதனை செய்கிறோம். ஒரு நாளில் 24 மணிநேரத்தில் 18 மணிநேரம் பிரதமர் மோடி நாட்டுக்காக கடுமையாக உழைக்கிறார். எனவே அவரை மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய வேண்டும்’’ என அமித் ஷா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT