Published : 18 Feb 2019 10:41 AM
Last Updated : 18 Feb 2019 10:41 AM

விருப்பத் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட பிறகும் கட்டண சேனல்கள் மீண்டும் ஒளிபரப்பாகவில்லை: அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்

கட்டண சேனல் விருப்பத் தேர்வுக்கான கால அவகாசத்தை வரும் மார்ச் 31-ம் தேதி வரை டிராய் நீடித்துள்ள நிலையில், அரசு கேபிள் டிவி(டேக் டிவி) செட்டாப் பாக்ஸ் பொருத் தியுள்ளவர்களுக்கு கட்டண சேனல்கள் மீண்டும் ஒளிபரப் பாகாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் 330 கேபிள் டிவி ஆபரேட்டர்களின் கீழ் அரசு கேபிள் டிவி(டேக்டிவி) செட்டாப் பாக்ஸ் பொருத்திய 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும், தனியார் செட்டாப் பாக்ஸ் பொருத்திய 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

இந்நிலையில், கட்டண சேனல்களை பார்க்க ஜன.1-ம் தேதி முதல் தனியே கட்டணம் செலுத்த வேண்டும் என இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) அறிவித்திருந் தது. அதன்பின், அந்த கால அவகாசத்தை பிப்.1-ம் தேதி முதல் என மாற்றி அறிவித்தது.

கட்டண சேனல்களின் விருப்பத்தேர்வு படிவங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்காத நிலையிலேயே, கரூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி(டேக் டிவி) செட்டாப் பாக்ஸ் பொருத்திய வாடிக்கை யாளர்களுக்கு கடந்த பிப்.1-ம் தேதி முதல் கட்டண சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், தனியார் செட்டாப் பாக்ஸ் பொருத்தியுள்ள வாடிக்கையாளர்களுக்கு கட்டண சேனல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. கட்டண சேனல் ஒளிபரப்புக்கு 6 நாள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அதுவரை மட்டுமே தனியார் செட்டாப் பாக்ஸ் பொருத்தியுள்ளவர்களுக்கு கட்டண சேனல் ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த 12-ம் தேதி வரை ஒளிபரப்பு தொடர்ந்தது.

இந்நிலையில், கட்டண சேனல் விருப்பத்தேர்வுக்கான கால அவகாசத்தை வரும் மார்ச் 31-ம் தேதி வரை டிராய் நீடித்தது. இதனால், அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பொருத்தியுள்ள வாடிக்கையாளர்களுக்கு கட்டண சேனல் ஒளிபரப்பு மீண்டும் வழங்கப்படும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த் திருந்தனர்.

ஆனால், 5 நாட்களாகியும் கட்டண சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

இதுகுறித்து கேபிள் டிவி ஆபரேட்டர் அலுவலகத்தில் கேட்டபோது, “கட்டண சேனல் விருப்பத்தேர்வுக்கான கால அவகாச நீடிப்பு வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான், எங்களுக்கு அல்ல” என்றனர்.

ஆனால், கட்டண சேனல்களை விருப்பத்தேர்வு செய்யாத தனியார் செட்டாப் பாக்ஸ் பொருத்தியுள்ள வாடிக்கை யாளர்களுக்கு தொடர்ந்து கட்டண சேனல் ஒளிபரப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பொருத்திய வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x