

கோவை மாவட்டம் சோமையனூர் பகுதியில 'சின்னதம்பி' எனும் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்திப் வனத்துறையினர் பிடித்தனர்.
சோமையனூர் பகுதியில 'சின்னதம்பி' எனும் காட்டு யானை, விவசாய நிலங்களை தொடர்ச்சியாக சேதப்படுத்துவதாக விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி அந்த யானையைப் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி, 'சின்னதம்பி' யானைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். மனோகர் மற்றும் அசோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர். இதையடுத்து, கலீம், விஜய், முதுமலை, சேரன் ஆகிய நான்கு கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டு இந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின் பிடிபட்ட யானையை லாரியில் ஏற்றும்போது அதன் இரண்டு தந்தங்களும் உடைந்து சேதம் அடைந்தது.
இந்த காட்டு யானையை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் விட வனத்துறை முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கோவை மண்டல தலைமை வனபாதுகாவலர் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:
"14 எம். எல் மருந்து சின்னதம்பி யானைக்கு செலுத்தப்பட்டுள்ளது. யானை இடமாற்றம் செய்வதற்கு, 'சின்னதம்பி கஜா யாத்ரா' என பெயரிடப்பட்டுள்ளது. யானையை நல்ல இயற்கை வளம் உள்ள இடத்தில் கொண்டு போய் விடுகிறோம். ஏற்கெனவே பிடிக்கப்பட்ட 'விநாயகன்' யானை ரேடியோ காலர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது, அது போல சின்னதம்பி யானையும் ரேடியோ காலர் மூலம் கண்காணிக்கப்படும்" என தெரிவித்தார்
விளை நிலங்களை சேதப்படுத்துவதாக கூறி விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டதால் 'விநாயகன்' என்ற காட்டு யானையை கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி இதே பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.