Last Updated : 28 Jan, 2019 03:02 PM

 

Published : 28 Jan 2019 03:02 PM
Last Updated : 28 Jan 2019 03:02 PM

புதுச்சேரி மருத்துவர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை: உறங்கிக் கொண்டிருந்தபோது திருடர்கள் கைவரிசை

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் மருத்துவர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் திருட்டு போனது. உறவினரின் திருமண நிகழ்வுக்குச் சென்று விட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி விவிபி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் வடிவேல். இவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். வடிவேல் தனது மனைவி வள்ளியம்மாளுடன் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கடலூர் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி உறங்கினர்.

காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவை திறந்து உள்ளே வந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.150 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் கோரிமேடு காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

போலீஸாரிடம் விசாரித்தபோது, "திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, வங்கி லாக்கரில் இருந்து வடிவேல் தனது நகையை எடுத்து வந்துள்ளனர். திருமணத்துக்குச் சென்று வந்து உறங்கி விட்டனர். வீட்டில் இரண்டு படுக்கையறை உள்ளது. இன்று காலை மீண்டும் வங்கி லாக்கரில் நகைகளை வைக்கத் திட்டமிட்டு இருந்தார்.

காலையில் எழுந்து பார்த்தபோதுதான் நகைகள் திருட்டு போனது தெரிந்தது. திருமண நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்பதை உறுதி செய்துள்ள திருடர்கள் கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்.  

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x