Published : 01 Jan 2019 05:58 PM
Last Updated : 01 Jan 2019 05:58 PM

புத்தாண்டு உயிரிழப்பு; எதிரெதிரே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 2 இளைஞர்கள் பலி

வேளச்சேரி அருகே புத்தாண்டு கொண்டாட சென்ற இளைஞர்கள் வேகமாக ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள், மற்றொரு மோட்டர் சைக்கிளுடன் எதிரெதிரே மோதிக்கொண்டதில் 2 பேர் பலியானார்கள்.

வேளச்சேரி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (22). இவரது நண்பர் புருஷோத்தமன் (19). அதே பகுதியில் வசித்து வந்தார். இருவரும் புத்தாண்டை கொண்டாட முடிவு செய்தனர். நேற்றிரவு புத்தாண்டு கொண்டாடுவதற்காக பெசன்ட் நகர் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

வினோத் குமாரும் புருஷோத்தமனும் ஒரே பைக்கில் சென்றனர். வேளச்சேரி 100 அடி சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது எதிரில் அதிவேகமாக வந்த மற்றொரு பைக் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வினோத் குமாரும், புருஷோத்தமனும் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

எதிரில் பைக்கில் வந்து மோதிய நபர் படுகாயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மயக்கத்தில் இருப்பதால் அவர் யார் என்பது தெரியவில்லை. கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x