Published : 02 Jan 2019 02:12 PM
Last Updated : 02 Jan 2019 02:12 PM

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடை நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வதை தடுக்கக் கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 17 அன்று தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான விதிகளை உருவாக்கி 2019 ஜனவரிக்குள் அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

அரசிதழில் வெளியிட்ட பின் அடுத்த இரண்டு மாதத்தில் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் உரிய முறையில் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும், அவ்வாறு விதிகள் உருவாக்கப்பட்டு, அதன்கீழ் ஆன்லைன் விற்பனையாளர்கள் அனுமதி பெறும்வரை ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வதற்கான தடை அமலில் இருக்கும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை வழங்கி உத்தரவிட்டனர்.

இதையடுத்து மேல்முறையீடு வழக்கு விசாரணை ஜனவரி 24-க்கு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x