Published : 07 Jan 2019 03:01 PM
Last Updated : 07 Jan 2019 03:01 PM

திருவாரூருக்கு தேர்தல் தேதி அறிவித்ததை மக்கள் கேலிக்கூத்தாகப் பார்க்கின்றனர்: விஜயகாந்த்

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது ஒரு கேலிக்கூத்தாக, கேள்விக்குறியாக மாறியிருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தொகுதி எம்எல்ஏவும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி மறைவுக்குப் பின் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தலும், 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ரத்தினக்குமார் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. மேலும் தேர்தல் ஆணையத்திலும் தேர்தலை ரத்து செய்யக் கோரி டி ராஜா மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்வதாகவும், மாநிலத் தேர்தல் ஆணையமும் மாவட்ட அதிகாரிகளும் இடைத்தேர்தல் தொடர்பாக எடுத்த அனைத்துப் பணிகளை நிறுத்துமாறும் தமிழகத் தேர்தல் அதிகாரிக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. முன்னதாக, திருவாரூர் இடைத்தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் என, திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில், இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், "திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று 'கஜா' புயல் நிவாரணத்தை காரணம் காட்டி ரத்து செய்திருக்கிறது. இடைத்தேர்தலை அறிவித்த போது இந்திய தேர்தல் ஆணையம், தமிழக அரசோடு கலந்து பேசி முடிவு எடுத்திருந்தால் இடைத்தேர்தல் ரத்து என்கிற நிலை ஏற்பட்டிருக்காது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 'கஜா' புயல் பாதிப்பு என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே தெரிந்த ஒன்று. இந்த பாதிப்பின் நிலையை அறியாமல் இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்ததை, மக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர். மக்கள் யாரும் தேர்தல் வேண்டும் என்று கேட்கவில்லை, வேண்டாம் என்றும் சொல்லவில்லை. ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது ஒரு கேலிக்கூத்தாக, கேள்விக்குறியாக மாறியிருப்பதை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என விஜாகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x