Published : 29 Jan 2019 12:54 PM
Last Updated : 29 Jan 2019 12:54 PM

கோடநாடு விவகாரம்: குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

கோடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான் மற்றும் மனோஜ் பிப்ரவரி 2-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயான், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் சயானின் மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கு தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சயானை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.

இந்நிலையில், சயான் மற்றும் மனோஜ் பத்திரிகையாளர் சாமுவேலுடன் சேர்ந்து கோடநாடு விவாகரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்புள்ளதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை மறுத்த முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியவர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் டெல்லியில் இருந்து சயான் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.

இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு வழக்கறிஞர் நந்தகுமார் மனு தாக்கல் செய்தார்.

விசாரணைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு, கடந்த 24-ம் தேதி சயான் மற்றும்  மனோஜ் ஆகிய இருவரும் பதில் அளிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் சார்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார். பதில் அளிக்க கூடுதல் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பி.வடமலை சயான் மற்றும் மனோஜ் 29-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

இதன் பேரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் சயான் மற்றும் மனோஜ் நேரில் ஆஜராகினர். விசாரணையில் அவர்களின் வழக்கறிஞர் செந்தில்குமார் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார்.

இந்நிலையில் வழக்கறிஞர்கள் பாலாஜி மற்றும் ஆனந்தன் தங்களையும் வழக்கில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தினர். செந்தில்குமார் மனுவிலேயே சேர்த்துக்கொள்ள நீதிபதி அறிவுறுத்தினார்.

பின்னர் கொலை வழக்கு தொடர்பான விசாரணை வரும் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வருவதால் அன்றைய தினமே ஜாமீன் ரத்து கோரும் வழக்கும் விசாரிக்கப்படும். அன்று சயான் மற்றும் மனோஜ் நேரில் ஆஜராக வேண்டும் என மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கறிஞர்கள் ஆட்சேபனை

இந்நிலையில், சயான் மற்றும் மனோஜை வழக்கறிஞர் ஆனந்தன் பார் கவுன்சிலுக்குள் அழைத்துச் சென்றார். அதற்கு அதிமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x