விளையாடும்போது விபரீதம்: இரும்புக்கதவு தலையில் விழுந்ததால் சிறுவன் உயிரிழப்பு

விளையாடும்போது விபரீதம்: இரும்புக்கதவு தலையில் விழுந்ததால் சிறுவன் உயிரிழப்பு
Updated on
1 min read

போரூரில் புதிதாக கட்டும் கட்டிடம் முன் விளையாடிய சிறுவன்மீது இரும்புக்கதவு விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார்.

போரூர், கணேஷ் அவென்யூ, 8-வது தெருவில் வசிப்பவர் ஏழுமலை (38). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (34).  இவர்களுக்கு 6 வயதில் விஷால் என்ற மகன் இருந்தார். விஷால் முகலிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

விஷால் இன்று பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகே விஷால் இரும்புக் கதவைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்தக் கதவு எந்தவிதப் பிடிமானமும் இல்லாமல் அமைக்கப்பட்ட நிலையில் அதைப் பிடித்து விளையாடிய சிறுவன் விஷால் மீது எதிர்பாராதவிதமாக சாய்ந்து விழுந்தது. இதில் விஷாலின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுவன் உயிரிழந்ததைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர், விபத்து குறித்து போரூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இறந்து போன சிறுவன் விஷாலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அஜாக்கிரதையாக இருந்து சிறுவன் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக கட்டிடத்தின் கட்டுமான இன்ஜினீயரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரும்புக்கதவு முறையாக அமைக்காததே இந்த விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in