Published : 24 Jan 2019 11:32 AM
Last Updated : 24 Jan 2019 11:32 AM

தமிழகத்தில் அதானி குழுமம் மேலும் ரூ.12,000 கோடி முதலீடு: ஹுண்டாய் ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது

தமிழகத்தில் மேலும் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் முடிவு செய்துள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி கரன் அதானி தெரிவித்தார்.

சென்னையில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசும்போது, ‘‘கடந்த 2015ல் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு பெரும்வெற்றி அடைந்தது. அதில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த 98 நிறுவனங்களில், 64 நிறுவனங்கள் வர்த்தக ரீதியிலான உற்பத்தியை தொடங்கும் நிலையில் உள்ளன. மற்ற நிறுவனங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

தற்போது நடந்து வரும் 2-வது மாநாட்டுக்கு 5,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் வருகை தந்துள்ளனர். குறிப்பாக, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். இதன்மூலம் குறிப்பிடத்தக்க அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன’’ என்றார்.

அதானி துறைமுகங்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கரன் அதானி பேசியபோது, ‘‘பல்லவர், சோழர்கள் காலம் முதலே தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கிய மாநிலம் தமிழகம். ராஜாஜி, ராதாகிருஷ்ணன், அப்துல்கலாம் போன்ற தலைவர்களை வழங்கிய மாநிலம். காட்டுப்பள்ளி துறைமுகம், கமுதியில் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கும் பணிகளை அதானி குழுமம் செய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் முடிவு செய்துள்ளது’’ என்றார்.

டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் பேசியபோது, ‘‘நாட்டிலேயே தொழில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலம் தமிழகம். இங்கு 37 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. முதலீட்டாளர்களுக்காக ஒரு மாநாடு நடத்துவது, தமிழக அரசின் சிறந்த முயற்சியாகும். இதன்மூலம் தமிழக தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.முதல்வர் பழனிசாமி எல்லோராலும் எளிதில் அணுகக் கூடியவர், கடின உழைப்பாளி, சிறப்பாக செயல்படுகிறார்’’ என்று பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவில் 2-வது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக ஹுண்டாய் கார் நிறுவனம் விளங்குகிறது. சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள இதன் ஆலையின் விரிவாக்கம் மற்றும் பேட்டரி கார் தயாரிப்புக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.

மாநாட்டின் தொடக்கமாக சென்னை கலாஷேத்ரா குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது. ‘ஆயுதம் செய்வோம்’ என்று தொடங்கும் பாரதியாரின் பாடலை பாடகி ஷோபனா விக்னேஷ் பாடினார்.

கடந்த 2015-ம் ஆண்டு மாநாட்டின்போது, பறக்கும் குதிரை பறந்து வந்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவிப்பது போன்ற, மெய்நிகர் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அதுபோல் இந்த ஆண்டில், பறக்கும் குதிரை, தமிழகம் முழுவதும் உள்ள புதியதாக தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களை பார்வையிட்டு, இறுதியாக மாநாட்டு மேடைக்கு முன்பு வந்து, முதல்வர் பழனிசாமி மீது பூச்சொரிவது போலமெய்நிகர் காட்சி அமைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x