Published : 30 Jan 2019 07:08 PM
Last Updated : 30 Jan 2019 07:08 PM

திரையரங்குகளில் அதிக அளவு பார்க்கிங் கட்டணம், உணவுக் கட்டணம்: அரசு உத்தரவைப் பின்பற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் தொடர்பான அரசு உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த எஸ்.நடராஜன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், ''பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் உரிய வாகனக் கட்டணம் வசூலிப்பதில்லை. அதிகப்படியான கட்டணத்தையே வசூலிக்கின்றன.

திரையரங்குகளில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்கச் செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

அதிக அளவில் கட்டணம் வசூலிப்பது திரையரங்கு ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிரானது. திரையரங்குகளில் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. குறிப்பாக குடிநீர் கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. குடிநீருக்கு அனுமதிக்காதவர்கள் இலவச குடிநீர் கூட வழங்குவது இல்லை.

சோதனை என்ற பெயரில் உடல் ரீதியான சோதனை நடத்துகின்றனர்.  இதை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது. மெட்டல் டிடெக்டர் சோதனைமுறையை அமல்படுத்த வேண்டும்.

இதுதொடர்பாக அரசு உரிய உத்தரவிட்டும் அந்த உத்தரவு பின்பற்றப்படுவதில்லை'' என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரையரங்குகள் பார்க்கிங் கட்டணம் தொடர்பான அரசு உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x