Published : 30 Jan 2019 01:09 PM
Last Updated : 30 Jan 2019 01:09 PM
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (புதன்கிழமை) கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், "நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் அதிமுகவினர், தலைமைக் கழகத்தில் வரும் 4-2-2019 திங்கள்கிழமை முதல் 10-2-2019 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.25,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட குழுவும், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளவர்களை முறைப்படுத்தி, ஒருங்கிணைத்து, பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக 7 பேர் கொண்ட குழுவும், தேர்தல் அறிக்கை தயாரிக்க 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT