

சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் அஸ்வினிகுமார் தலைமையில் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று வேட்டி அணிந்து பணிக்கு வந்தனர். அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது வேட்டி அணிய தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
சர்வதேச வேட்டி தினத்தையொட்டி புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்டி அணிந்து வந்தனர். புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகள் பலரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
குறிப்பாக தலைமைச்செயலர் அஸ்வினி குமார் கூறுகையில், "வேட்டி அணிவதை பெருமையாகக் கொள்ள வேண்டும். அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது வேட்டி அணிய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இதர செயலர்கள் கூறுகையில் "ஆண்டு முழுவதும் வேட்டி கட்டலாம். இதனால் பாரம்பரியம் காக்கப்படுவதுடன், நலியும் நெசவுத்தொழில் பாதுகாக்கப்படும். அனைவரும் வேட்டி கட்டுங்கள்" என்றனர்.