Published : 28 Jan 2019 05:36 PM
Last Updated : 28 Jan 2019 05:36 PM
ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (திங்கள்கிழமை) மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், அரசு ஆசிரியர்கள் - ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும், தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் வாதிடப்பட்டது.
ஜாக்டோ-ஜியோ தரப்பில், 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்திய பின்பு நிலுவையில் உள்ள 21 மாத ஊதிய பாக்கியை அரசு தர உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் சில தகவல்களை கேட்டறிந்துவிட்டு விசாரணையை சிறிது நேரம் ஒத்தி வைத்தனர்.
அதன்பின், மீண்டும் விசாரணை தொடங்கியபோது, அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தைக்கு நேரமில்லை, உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நீதிபதிகள் "அரசும் ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளனர். ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு கேட்டுள்ளனர்" என தெரிவித்தனர்.
அதற்கு ஜாக்டோ - ஜியோ தரப்பில், "21 மாத சம்பள பாக்கியையாவது தர உத்தரவிட வேண்டும்" என வாதிட்டனர்.
அதற்கு நீதிபதிகள், "தனிநபர் தொடர்ந்த வழக்கில் நீங்கள் கேட்பதுபோன்று உத்தரவிட முடியாது. அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக நீங்கள் கொடுத்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளீர்கள். இதனால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது" எனக்கூறி வழக்கை பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT