Published : 24 Jan 2019 11:08 AM
Last Updated : 24 Jan 2019 11:08 AM

தமிழகத்தில் கூட்டணியை பிரதமர் மோடிதான் அறிவிப்பார்: மதுரையில் பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் தகவல்

தமிழகத்தில் எந்த கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்க உள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி உரிய நேரத்தில் அறிவிப்பார் என அக்கட்சியின் தேசியச் செயலாளர் பி.முரளிதர ராவ் தெரிவித்தார்.

மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.27) எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இவ்விழா முடிந்ததும், பாஜக சார்பில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இக்கூட்டத்துக்கான ஏற்பாடு களை பாஜக தேசியச் செயலாளர் பி.முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், பொதுக்கூட்ட ஒருங் கிணைப்பாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பின்னர், முரளிதர ராவ் செய்தியாளர்களிடம் கூறியது: மத்தியில் நான்கரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழக வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி அளித்துள்ளார். இதுவரை எந்த மத்திய அரசும் வழங்காத திட்டங்களை குறுகிய காலத்தில் தமிழகம் மோடியிடம் இருந்து பெற்றுள்ளது. குறிப்பாக உள் கட்டமைப்பு, தேசிய நெடுஞ் சாலை, ஸ்மார்ட் சிட்டி, ரயில்வே, கப்பல், ராணுவத் தளவாடம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் அதிக பலன்களை பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில், நரேந்திர மோடி தமிழகம் வருவது மிக முக்கியமான தருணம். தமிழகத்திலும், தென் இந்தியாவிலும் பாஜக வளர்ச்சியை அடைய இக்கூட்டம் உதவும். மதுரை அருகே மண்டேலா நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பர். இக்கூட்டத்துக்காக வாக்குச்சாவடி, கிராம அளவில் பாஜக நிர்வாகிகள் அணுகியபோது நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் ஆர்வத்துடன் இருந்ததைக் காண முடிந்தது.

2014-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் நரேந்திர மோடியின் செல்வாக்கு அபாரமாக வளர்ச்சி அடைந்துள்ளது. திமுக, அதிமுகவுடன் ஏற்கெனவே நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவாகும் முன்பு, எதையும் வெளிப்படையாக நாங்கள் தெரிவிக்க முடியாது. பிரதமரே உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பார். எந்த முடிவாக இருந் தாலும் பிரதமர், பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர்தான் அறிவிப் பர். இவ்வாறு அவர் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x