Published : 28 Jan 2019 05:24 PM
Last Updated : 28 Jan 2019 05:24 PM

பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் நேர்ந்த பரிதாபம்: தந்தையின் கண்முன்னே மகள் பேருந்தில் சிக்கி பலி

மகளை பள்ளியில் விட அழைத்துச் சென்ற தந்தை ஓட்டிய இருசக்கர வாகனம் நிலை தடுமாறியது. இதில் கீழே விழுந்த மகள், தந்தை கண் எதிரே பேருந்தில் சிக்கி பலியான சம்பவம் பம்மலில் நடந்துள்ளது.

அனகாபுத்தூர் குருசாமி நகர் 4-வது தெருவில் வசிப்பவர் அம்ஜத்கான் (43). இவரது மகள் ஆலியா (13). இவர் தேனாம்பேட்டை எஸ்ஐஈடி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் தந்தை அம்ஜத்கான் பள்ளியில் விட்டு வருவார். வழக்கம்போல் இன்று காலை 7.30 மணிக்கு மகள் ஆலியாவை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அழைத்துச் சென்றார் தந்தை அம்ஜத்கான்.

பள்ளிக்கு நேரமானதால் சற்று வேகமாகச் சென்றுள்ளார் அம்ஜத்கான். பம்மல் நல்லதம்பி சாலையில் செல்லும்போது முன்னால் எஸ்.18 என்ற மினி பேருந்து பொழிச்சலூரிலிருந்து குரோம்பேட்டை நோக்கி சென்றுள்ளது. காலையில் சாலையில் போக்குவரத்து அதிகம் இருக்கும்.

இந்நிலையில் வேகமாகச் சென்ற அம்ஜத்கான் முன்னாள் சென்ற மினி பேருந்தை முந்த முயன்றுள்ளார். அப்போது எதிரில் வாகனம் ஒன்று திடீரென வர நிலைகுலைந்த அம்ஜத்கான் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் திடீரென சாலையில் கவிழ்ந்தது.

இதில் அம்ஜத்கான் வலது பக்கமும், ஆலியா இடது பக்கமும் கீழே விழுந்தனர். இதில் கீழே விழுந்த ஆலியா மீது மினி பேருந்தின் பின் சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆலியா பலியானார். தந்தை கண் முன்னே மகள் பலியானதைப் பார்த்து அங்குள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஓடிச்சென்று அம்ஜத்கானைத் தூக்கினர். விபத்து நடந்ததும் ஓட்டுநர் இறங்கி ஓடிவிட்டார்.

தன் கண்முன்னே மகள் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்ட தந்தை அம்ஜத்கான் கதறி அழுதார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் ஆலியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x