Published : 12 Jan 2019 09:33 PM
Last Updated : 12 Jan 2019 09:33 PM

சுடுதண்ணியை முகத்தில் ஊற்றிவிடுவேன்; திட்டிய டீக்கடைக்காரரைக் கொல்லச் சென்ற இளைஞர்கள்

சென்னையில் தன்னை திட்டிய டீக்கடைக்காரரை கொலை செய்யும் நோக்கில் கத்தியுடன்  சென்ற இளைஞர்கள் காவல் ஆய்வாளர் கண்ணில்பட அவர்களை துரத்தி பிடித்து கைது செய்தார்.

சென்னை செம்பியம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு இடத்தில் இரண்டு இளைஞர்கள் கையில் துணியால் சுற்றிய ஒரு பொருளுடன் சந்தேகப்படும்படி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆய்வாளர் ஜெகந்நாதன் கண்ணில் பட்டனர். யாரது என்று அவர் குரல் கொடுத்து அவர்களை நிற்கச்சொன்னார்.

போலீசை கண்டதும் அவர்கள் ஓடத்துவங்கினர். அவர்கள் ஓடியதும் சந்தேகமடைந்த காவல் ஆய்வாளர் ஜெகந்நாதன் அவர்களை துரத்திச் சென்று மடக்கி பிடித்துள்ளார். பிடித்த அவர்களிடம் விசாரணை செய்த போது இருவரும் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சுதாகர் (22) மற்றும் சரத்(24) எனத் தெரியவந்தது.

அவர்களை சோதித்தபோது அவர்கள் கையில் துணியால் சுற்றிய 2 அடி நீள கத்திகள் இருந்தது. கத்தியுடன் எங்கே செல்கிறீர்கள் என்று அவர்களை ஆய்வாளர் விசாரிக்க முதலில் மழுப்பியவர்கள் போலீஸ் பாணியில் விசாரித்ததும் உண்மையை கூறியுள்ளனர்.

அதைக்கேட்ட ஆய்வாளர் திடுக்கிட்டு போனார். சார் நாங்கள் ஒரு ஆளை கொலை செய்ய போகிறோம் என்று கூறியுள்ளனர். அடப்பாவி முன்னப்பின்ன கொலை செய்திருக்கிறீர்களா? கொலை செய்வது அவ்வளவு சாதாரண விஷயமா? அப்படி என்னத்தான் அந்த நபர் செய்தார் என்று கேட்டுள்ளார் ஆய்வாளர்.

சார் என் நண்பன் சரத் முகத்தில்சுடுதண்ணிய ஊற்றிவிடுவேன்னு கேவலமா திட்டிட்டான் சார் டீக்கடைக்காரன் ஒருவன் என்று இன்னொருவன் சொல்ல இதில் யார் சரத் என்று கேட்க நான்தான் சார் என்று இன்னொருவர் சொல்லியிருக்கிறார்.

சமையல் வேலை செய்றேன் சார், கொஞ்சம் தண்ணி ஜாஸ்தி ஆயிடுச்சு, அதோட ஓட்டேரியில் உள்ள டீக்கடையில் போய் வடை சாப்பிட்டேன் அங்க அந்த மாஸ்டருக்கும் எனக்கும் தகராறு ஆய்டுச்சு சார், முகத்தில் சுடுதண்ணிய ஊற்றிடுவேன்னு கேவலமா பேசி திட்டி அனுப்பிட்டார் சார் அதனால்தான் அந்த ஆளை கொல்லணும்னு இவனையும் கூப்பிட்டுகிட்டு 2 கத்தி வாங்கிட்டு போகிறேன் என்று ஒருவர் கூறியுள்ளார்.

ஏண்டா கொலை செய்றதுன்னா நீ கறிகாய் வெட்றது மாதிரின்னு நினைத்துக்கொண்டாயா, கொலை உங்களுக்கு அவ்வளவு சாதாரணமாக போய்விட்டதா? என போலீஸார் திட்ட அதற்காகத்தான் சார் நண்பன் சுதாகரை கூட்டிட்டு போறேன் அவன் ஏற்கெனவே கொலைகேசில் சிக்கியவன் அனுபவம் இருக்கு என்று சொல்லி அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் சரத்.

ஏற்கெனவே கொலைக்கேசு இருக்கா? என்று அதிர்ச்சியடைந்த போலீஸார் இருவரையும் ஸ்டேஷன் அழைத்துச் சென்று அவர்கள் விபரத்தை வாங்கி கத்தியையும் கைப்பற்றியுள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் ஓட்டேரியில் டீக்கடை வைத்திருக்கும் சசிகுமார் என்பவரிடம் சரத் மதுபோதையில் தகராறில் ஈடுபட அவர் திட்டி அனுப்பியுள்ளார்.

அதே ஆத்திரத்துடன் நண்பர் சுதாகரிடம் சரத் வந்து கூற இருவரும் கத்தியுடன் சசிகுமாரை கொல்லும் நோக்கில் செல்லும்போது ஆய்வாளரால் மடக்கிப்பிடிக்கப்பட்டனர். ஏன் கொலை செய்கிறோம், எதற்காக கொலை செய்கிறோம் என்கிற நோக்கம் எதுவும் இல்லாமல் மது போதையில் சைட் டிஷ் சாப்பிடுவதுபோல் கொலை செய்ய கிளம்பி விட்டார்கள் என்று தலையில் அடித்துக்கொண்ட போலீஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸாரின் ரோந்துப்பணியால் சசிகுமார் என்கிற டீக்கடைக்காரரின் உயிர் தப்பியது. ஒரு குற்றச்செயலும் தடுக்கப்பட்டது. சுதாகர் மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x