Published : 25 Jan 2019 09:26 AM
Last Updated : 25 Jan 2019 09:26 AM
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக் காக பிரதமர் நரேந்திர மோடி பிப்.10-ம் தேதி திருப்பூர் வர உள்ளதாக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
இம்மாதம் 27-ம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி, எய்ம்ஸ் மருத் துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும், பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். பிப்.10-ம் தேதி திருப்பூரில் நடைபெறும் மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார்.
2 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க இருப்பதால், அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அவரது வருகை, நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தமிழகத்தில் விரைவாகத் தொடங்கவும், தேர்தல் களத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கவும் உதவும்.
ஏற்கெனவே, கோவை, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைக்கிறோம். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT