Published : 11 Sep 2014 08:15 AM
Last Updated : 11 Sep 2014 08:15 AM

‘2016 சட்டப்பேரவை தேர்தல் வரை கருணாநிதியை மட்டுமே முன்னிறுத்துங்கள்’: ஸ்டாலினுக்கு வல்லுநர் குழு ஆலோசனை

வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் வரை கருணாநிதியை மட்டுமே முன் னிறுத்தி செயல்பட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலி னுக்கு வல்லுநர் குழுவினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் 2016-ல் நடக்க வுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக சார்பில் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது திமுகவுக்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தனது அரசியல் எதிர்காலத்துக்கு உதவும் வகை யில் ஆலோசனைகளை வழங்கு வதற்காக ஒரு குழுவை ஸ்டாலின் நியமித்துள்ளார். இந்தக் குழுவினர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே நரேந்திர மோடியின் வெற்றி வியூகத்துக்காக களம் இறங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அக்குழுவை சேர்ந்த சிலர், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கடந்த நாடாளுமன்றத் தேர்த லுக்கு ஓராண்டுக்கு முன்பே நரேந்திர மோடியின் வெற்றிக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் வல்லுநர்கள், கணினி நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தேர்தல் கமிஷனில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் ஆகி யோரைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. தமிழகத்திலும் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

தற்போது அதே குழுவினர் ஸ்டாலினுக்கு ஆலோசனை அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த ஆலோசனை யின்பேரிலேயே ஸ்டாலினின் இணையதளம் நவீனப்படுத்தப்பட் டுள்ளது. அந்த இணையத்திலேயே அவருடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். அந்தத் தகவல்கள் ஆலோசனைக் குழுவினரின் மொபைல் போனுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும். ஸ்டாலின் அவசியம் பார்க்க வேண்டிய தகவலாக இருந்தால் அது உடனடியாக அவரது டேப்லெட்டுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் ஸ்டாலினை சந்திக்க ஆன்-லைனிலேயே முன்அனுமதி பெற முடியும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

ஆலோசனைக் குழுவில் இருக் கும் அரசியல் பிரிவைச் சேர்ந்த சிலர் தெரிவித்ததாவது:

“எங்களிடம் பேசிய ஸ்டாலின் தரப்பினர், ‘உள்கட்சி பூசல்களை கவனத்தில் கொள்ளாமல் மனதுக் குப்பட்ட உண்மையான விஷயங் களை நேரடியாக எடுத்துச் சொல்லுங்கள். குறிப்பிட்ட விஷயங் களை அல்லது நபர்களைப் பற்றி சொன்னால் ஸ்டாலின் கோபப்ப டுவார் என்று நினைக்காமல் துணிச்ச லுடன் ஆலோசனை கூறுங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு சில ஆலோசனைகள் வழங்கப் பட்டுள்ளன.

குறிப்பாக, வரும் சட்டப் பேரவைத் தேர்தல் வரை திமுக தலைவர் கருணாநிதியை முன் னிறுத்தியே அரசியல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் இந்திய அரசியல்வாதிகளிலேயே நீண்ட அனுபவமும் செயல்திறனும் கொண்டவர் கருணாநிதி மட்டுமே. அவர் நிரூபிக்கப்பட்ட ஒரு தலை வர். பல அரசியல் களங்களில் வெற்றிகளை பெற்றுள்ளார். நிரூபிக்கப்படாத எவரையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

1957-ம் ஆண்டு தேர்தலில் அண்ணா போட்டியிட்டபோது யாரும் கூட்டணிக்கு வரவில்லை. அந்தத் தேர்தலில் 15 எம்.எல்.ஏ.க்களை திமுக பெற்ற பிறகுதான் 1962-ம் ஆண்டு கூட்டணிக்கு முஸ்லிம் லீக் கட்சி வந்தது. அதேபோல 1989-ல் சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்டபோது காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வரவில்லை. ஜெயலலிதா திமுகவை எதிர்த்து தனித்து போட்டியிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அதே ஆண்டு நடந்த மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் திமுகவை அதிமுக தோற்கடித்தது. அதன்பிறகுதான் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முன்வந்தது. தேசிய அளவிலும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம்.

அனைத்துக் கட்சிகளும் வரும் சட்டசபை தேர்தலை குறிவைத்து வேலைகளை தொடங்கிவிட்டன. ஆனால், திமுகவில் கோஷ்டி பூசல்களுக்கே இன்னமும் தீர்வு காணவில்லை. இந்த நேரத்தில், கருணாநிதியே முன்வந்து ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தாலும் அதை அரசியல் எதிரிகள் வேறுமாதிரி திசை திருப்புவார்கள். எனவே, சட்டப்பேரவை தேர்தல் வரை ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் என்ற கோஷத்தை தள்ளிப்போடுங்கள். கருணாநிதியை முன்னிறுத்தினால் மட்டுமே தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிராக பலமான கூட்டணியை அமைக்க முடியும். அதுமட்டுமின்றி மதிமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளும் கூட்டணிக்கு வரக்கூடும் என்று ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x