Published : 03 Jan 2019 04:29 PM
Last Updated : 03 Jan 2019 04:29 PM

கஜா புயல் பாதிப்பால் தனுஷ்கோடி கடற்கரைக்கு ஆமைகள் வருகை குறைவு: இயற்கை ஆர்வலர்கள் கவலை

கஜா புயல் பாதிப்பால் கடற் கரைப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்த ஆண்டு ஆமைகளின் வருகை குறைந் துள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்திய கடல் பகுதியில் 5 வகையான ஆமைகள் வாழ் கின்றன. இதில், இதய வடிவில், ஆலிவ் வண்ணத்தில் இருக்கும் ஆலிவ் ரெட்லி டர்டில் எனப்படும் சிற்றாமை வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடற்பகுதியில் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த ஆமைகள், தமிழக கடற்கரைப் பகுதிகளுக்கு பங்குனி மாதத்தில் அதிகம் வருவதால், இதை பங்குனி ஆமைகள் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.

கடல் சுற்றுச்சூழல் சமன்பாட்டில் கடல் ஆமைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும், மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு மீன்வளத்தை அழிக்கும் ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உணவாக உட்கொள்கின்றன. இதன் மூலம் மீன்வளம் காக்கப்படுகிறது. ஆனால், பருவநிலை மாற்றம், கடல் மாசுபாடு, தடை செய்யப்பட்ட மீன்பிடித்தல் ஆகியவை கடல் ஆமைகளுக்கு பெரும் அச்சு றுத்தலாகி வருகின்றன.

ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் ஆமை இனப்பெருக்க பகுதிகளாக 90 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஜன.1 முதல் ஏப்.்30 வரை விசைப் படகுகள், வெளியே இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளிட்டவை மூலம் கரையிலிருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு, மீன்பிடிக்கத் தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் ஆமைகள் முட்டையிடும் இடமாக கன்னிராஜபுரம், மூக் கையூர், ஒப்பிலான், ஏர்வாடி, சேதுக்கரை, புதுமடம், மண்டபம், அரியமான் அழகன், ஆற்றங்கரை, புதுவலசை, பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இனப்பெருக்கக் காலமான நவம்பர் முதல் ஏப்ரல் வரை, ஆமைகள் குறிப்பிட்ட கடற்கரைக்கு வந்து இரவில் கரையை நெருங்கி, ஆழக் குழிதோண்டி முட்டையிட்டுச் செல்கின்றன. இந்த ஆண்டு இனப்பெருக்கக் காலத்தின் இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஆமை களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இது, இயற்கை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில், கடலின் தூய்மை பணியை செய்யும் ஆமைகளுக்கு கடல் துப்புரவாளர்கள் என்ற பெயரும் உண்டு. பாதுகாக்கப்பட்ட ஆமை யினமாக அறிவிக்கப் பட்டுள்ள சிற்றாமைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை பாதுகாக்கும் நட வடிக்கையில் அரசு மும்முரமாக ஈடுபட வேண்டும் என்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

2017 டிசம்பர் முதல் 2018 ஏப்ரல் வரையிலான காலத்தில் தனுஷ்கோடி அரிச்சல் முகுந்தராயர் சத்திரம் கடற்பகுதியிலிருந்து அரிச்சல்முனை கடற்பகுதி வரை 20,475 ஆமை முட்டைகளை சேகரித்தோம். அவற்றிலிருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு ஆமைகளின் வருகை தற்போது வரை தொடங்கவில்லை. கஜா புயல் தாக்கத்தால் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட மாற் றம் காரணமாக ஆமைகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என கருதுகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x