Published : 01 Jan 2019 08:15 AM
Last Updated : 01 Jan 2019 08:15 AM

கடன் பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க வங்கிகளிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்: விதிகளில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

வங்கிகள்  மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று வெளி நாடுகளுக்கு தப்பிச் செல்வதைத்  தடுக்க  கடன் பெறுபவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை  வங்கிகளிடம்  ஒப்படைக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா நிலையூரைச் சேர்ந்த அங்கன்வாடி பெண் ஊழிய

ரான மங்களம்  என்பவர், அரசின் முன்அனுமதி பெறாமல் அதே ஊரைச்சேர்ந்த உறவினரான ராக்கம்மாள் என்பவரின் பாஸ்போர்ட்டைப்  பயன்படுத்தி சிங்கப்பூர் சென்று வந்ததாகக் கூறி   பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து மங்களம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செயயப்பட்ட பதில் மனுவில், ‘‘பணிக்கு வராமலும், முன்அனுமதி பெறாமல் வெளிநாடு சென்றதாலும் அங்கன்வாடி பகுதிநேர ஊழியரான மங்களம் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் மீண்டும் தன்னை பணியில் சேர்க்க கோருவதற்கு அவருக்கு உரிமை இல்லை’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், “பகுதிநேரப்  பணியாளராக இருந்தாலும் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். விருப்பமில்லாமல் எந்தத்  தொழிலையும் செய்யக்கூடாது”  என கருத்து தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, இந்த வழக்கில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்ற அங்கன்வாடி ஊழியருக்கு  ஒருவார சிறை தண்டனை விதித்தார். மேலும்,  அவரைக்  கைது செய்து சிறையில் அடைக்கவும் சம்பந்தப்பட்ட  காவல் நிலைய அதிகாரிக்கு அறிவுறுத்தி,  அப்பெண்ணின் பாஸ்போர்ட் மற்றும் ரேஷன் கார்டைப்  பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

அதேபோல பாஸ்போர்ட் கொடுத்து உதவிய ராக்கம்மாளின் ரேஷன் கார்டையும் பறிமுதல் செய்ய வேண்டும். அதேநேரம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான சலுகைகளை ரத்து செய்யக்கூடாது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று வெளி நாடுகளுக்கு தப்பிச் செல்வதைத்  தடுக்க  கடன் பெறுபவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை  வங்கிகளிடம்  ஒப்படைக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும். கடனைத்  திருப்பி செலுத்தும் வரை பாஸ்போர்ட்  திருப்பி ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும், குறித்த காலத்துக்குள் கடனைத்  திருப்பி செலுத்தாவிட்டால்  பாஸ்போர்ட் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும்,பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்குக்கூட வங்கிகளிடம் முன்அனுமதி பெறும் வகையில் மத்திய அரசு கண்டிப்பு காட்ட வேண்டும் என்றும்  உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x