Published : 30 Jan 2019 11:28 AM
Last Updated : 30 Jan 2019 11:28 AM

ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் அப்போலோ, சசிகலாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை: வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தகவல்

ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் அப்போலோ மருத்துவமனை மற்றும் சசிகலாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள ஆணைய விசாரணை, பிப்ரவரி 24-ம் தேதிக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் அனுப்பப் பட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், தம்பிதுரை எம்பி ஆகியோர் ஆணை யத்தில் அளித்த வாக்குமூலத்தின் நகலை தனக்கு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்து, பின்னர் அதை திரும்ப பெற்றுக் கொண்டார்.

மனு தள்ளுபடி

இதைத்தொடர்ந்து வருகிற 5-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார். 21 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.

துணை முதல்வரால் தாமதம்

சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறும் போது, “ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவரிடம் விசாரணை நடத்தினால் தான் பல மர்மங்களுக்கான முடிச்சுகள் சரியாகும்.

ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதால் வேகமாகச் சென்று கொண்டிருந்த ஆணைய பணிகள் சற்று தாமதமடைந்துள்ளன. அமைச்சர்கள் பலர் பொதுவெளியில் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அப்படி பேசும் 9 அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிடமும் குருமூர்த்தியிடமும் நிச்சயம் விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக ஆணையத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்து இருக்கிறேன்.

சாட்சிகளிடம் விசாரிக்கப் பட்டதன் அடிப்படையில் அப்போலோ மருத்துவமனை மற்றும் சசிகலாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவுமே இல்லை என்பது ஆணையத்துக்கு தெரியும். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கும் ஜெயலலிதா மரணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று பெரிய அரசியல் தலைவர்களே பேசுகின்றனர். அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டியது ஆணையத்தின் கடமை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x