

அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டம் 9-வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் இதுவரை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் அரசு ஆணவப்போக்குடன் செயல்படுவதாக இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளன..
இதுகுறித்து இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் இன்று வெளியிட்ட கூட்டறிக்கை:
“ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஈடுபடும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றோடு 9-வது நாளை எட்டுகிறது. அடக்குமுறைக்கு அஞ்சாமல் உறுதியான போராட்ட உணர்வுடன் களத்தில் நிற்கும் ஊழியர்களை மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
நள்ளிரவு கைது, மின்சாரத்தை நிறுத்தி இருளில் அடைப்பு உள்ளிட்ட பல ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தீரத்துடன் எதிர்த்து நின்றவர்களை குறிப்பாக பெண் ஊழியர்களை பாராட்டுகிறோம். நேற்றைய தினத்திலிருந்து நீதிதுறை ஊழியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
தலைமைச்செயலக ஊழியர் சங்கமும், அரசு அலுவலர் ஒன்றியமும் ஆதரவு தெரிவித்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், இதர ஜனநாயக அமைப்புகளும் ஆதரவு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பது போராட்டத்தின் முக்கிய கோரிக்கை. அதிமுகவின் 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நடக்கும் இப்போராட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்குக் கூட அரசு தயாராக இல்லை என்பது அரசின் ஆணவத்தையும், பிடிவாதப்போக்கையும் காட்டுகிறது. நீதிமன்றம் கொடுத்த ஆலோசனைகளையும் ஏற்கவில்லை.
போராடும் ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று நீதிமன்றத்திலும், பொது வெளியிலும் அறிவித்த பிறகும் அதைக் கணக்கில் எடுக்காமல், போராட்டத்தை கைவிட வேண்டுமென்கிற வேண்டுகோளை மட்டும் முதலமைச்சர் ஊடகங்கள் மூலமாக வெளியிட்டுக் கொண்டிருப்பது நியாயமற்றது.
போராடுபவர்களை ஒடுக்குவதில் இருக்கும் அக்கறை சுமுகத்தீர்வு காண்பதில் அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் +2 மாணவர்களுக்கு பிராக்டிகல் தேர்வு தொடங்க உள்ளது. ஆசிரியர்கள் பணியில் இல்லை என்பது அவர்களுக்கு ஒரு பதட்டத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பையும், நலனையும் கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை ஒத்தி வைப்பதை பரிசீலிக்க வேண்டுமென்று ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு மார்க்சிஸ்ட் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் முத்தரசன் சிபிஐ(எம்-எல்) லிபரேசன்-செயலாளர் எஸ். குமாரசாமி உள்ளிட்ட இடதுசாரி கட்சித்தலைவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.