Last Updated : 23 Jan, 2019 03:17 PM

 

Published : 23 Jan 2019 03:17 PM
Last Updated : 23 Jan 2019 03:17 PM

அமைச்சர் நிலோபர் கபிலுக்கு எதிரான லஞ்ச புகார்: சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை வக்போர்டு கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சர்தார்பாஷா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "மதுரை வக்போர்டு கல்லூரியில் 2017-ல் 30 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களிடம் 30 லட்சமும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களிடம் 35 லட்சமும் லஞ்சமாக வாங்கியுள்ளனர். இப்பணம் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், வக்போர்டு வாரிய தலைவர் அன்வர் ராஜா மற்றும் அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 30 உதவி பேராசிரியர்களில் பலர் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்வதற்கான உரிய கல்வித் தகுதியைப் பெறவில்லை. இருப்பினும் அமைச்சர் நிலோபர் கபில், வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு உதவி பேராசிரியர் பணிகளை வழங்கியுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரி மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வக்போர்டு கல்லூரியில் உதவி பேராசிரியர்கள்  நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்"

என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று (புதன்கிழமை) விசாரித்த நீதிபதி வேல்முருகன், "ஏற்கெனவே மனுதாரர் சிபிஐ விசாரிக்க கடந்த நவம்பர் மாதமே புகார் அனுப்பியுள்ளார். அந்த மனுவை சிபிஐ தமிழக தலைமை செயலருக்கு அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆவணங்களை பார்க்கும் போது தவறுகள் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது போல் உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆறு மாதத்தில் முடிக்கவும் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x