Published : 01 Jan 2019 03:00 PM
Last Updated : 01 Jan 2019 03:00 PM

சென்னை புத்தாண்டு கொண்டாட்டங்களில் சாலை விபத்தில் 8 பேர் பலி: 5 ஆண்டுகளைவிட அதிகம்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சாலையில் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 5 ஆண்டுகளைவிட மிக அதிகம்.

புத்தாண்டு வரும் நிலையில் அதைக் கொண்டாடத் தயாராகும் இளைஞர்கள், சிறுவர்கள் சாலையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை, கார்களை இயக்கும் நிலை உள்ளது. புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு களைகட்டும் கேளிக்கைகளில் வாகனங்களை ஓட்டும் பலரும் மது, கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை உபயோகப்படுத்திவிட்டு வாகனங்களை இயக்குகின்றனர்.

நள்ளிரவில் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் மது ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு அதிகாலையில் அதேபோதையில் வாகனத்தை இயக்கி விபத்தில் சிக்கிக்கொள்பவர்களும் உள்ளனர். இதுதவிர ஜாலிக்காக கும்பலாக ஒன்றுசேர்ந்து மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்று விபத்தில் சிக்கும் இளைஞர்களும் அதிகம். இவர்களால் சில நேரம் பொதுமக்களும் பலியாகியுள்ளனர்.

இந்த ஆண்டு புத்தாண்டை ஒட்டி போலீஸார் கிரீன்வேஸ் சாலை, அடையாறு, சாந்தோம் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தினர். அடையாறிலிருந்து கிண்டி ராஜ்பவன் வரையுள்ள சர்தார் பட்டேல் சாலையிலும் கவனம் செலுத்தினர்.  பெரும்பாலும் அந்தப் பகுதிகளில்தான் விபத்து அதிகம் நடக்கும் என்பதால் முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருந்தனர்.

ஆனால் அதையும் மீறி கடந்த 2 ஆண்டுகளைவிட அதிக அளவில் சாலை விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலீஸார் எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக விபத்துகள் அதிகம் நடப்பதைத் தடுக்க முடியாவிட்டாலும் உயிரிழப்பு 3 என்ற எண்ணிக்கையில் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அது இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.  

நேற்று மாலை முதல் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி ஆங்காகாங்கே சாலைத் தடுப்புகள் வைத்து போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இரவு 8 மணிமுதல் சென்னை களைகட்டியது. சாலையில் தடுப்புகள் வைத்து வாகனங்களின் வேகத்தைக் குறைத்ததால் விபத்து குறைந்தது. ஆனாலும் ஆங்காங்கே நடந்த விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர்.

இதில் ஒருவர் சாலையில் நடந்து சென்றவர். அவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள் இளைஞர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இதேபோன்று தினேஷ் என்கிற இளைஞர் மீது புழல் பைபாஸ் சாலையில் மோதிய லாரி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தினேஷ் உயிரிழந்தார்.

கடந்த ஐந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு புத்தாண்டு நள்ளிரவில்தான் 8 பேர் இறந்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு புத்தாண்டு அன்று சாலை விபத்தில் 5 பேர் மரணமடைந்தனர்.

இதுவரை கடந்த 6 ஆண்டுகளில் நடந்த விபத்துகள்

2018-ம் ஆண்டு போலீஸார் எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக உயிரிழப்பு இல்லா புத்தாண்டாக விடிந்தது.

2018-ம் ஆண்டு மொத்த விபத்து 11, உயிரிழப்பு- 0

2017-ம் ஆண்டு மொத்த விபத்து 120, உயிரிழப்பு-5

2016-ம் ஆண்டு  மொத்த விபத்து 296, உயிரிழப்பு 4

2015-ம் ஆண்டு  மொத்த விபத்து 58 உயிரிழப்பு 5

2014 - ம் ஆண்டு மொத்த விபத்து உயிரிழப்பு 5

இந்த ஆண்டு உயிரிழப்பு 8 ஆக அதிகரித்துள்ளது. விபத்துகள் எண்ணிக்கை காயம்பட்டோர் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களை எப்படி நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அன்றைய பொழுது விடிகிறது. அதிவேகமாக வாகனங்களை இயக்குவதும், போதையில் வாகனத்தை இயக்குவதும் விலை மதிப்பில்லா மனித உயிர்களை ஆண்டுதோறும் பலி வாங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x