Published : 05 Jan 2019 02:46 PM
Last Updated : 05 Jan 2019 02:46 PM

தி.நகரில் சிலிண்டர் வெடித்து விபத்து: 12 வயது சிறுமி தீயில் சிக்கி உயிரிழப்பு

சென்னை தி.நகரில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிக்கொண்ட 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை தி.நகர் லாலா தோட்டத்தில் வசித்துவருபவர் குப்பன். இவரது மனைவி தெய்வானை. இவர்களுக்கு சுரேஷ் என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுரேஷுக்கு திருமணமாகி ஷோபனா என்கிற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

குப்பனின் மகள் வயிற்றுப்பேத்தி ஸ்ரீ பிரியா (12). இவர் தந்தை சின்னச்சாமியை சிறு வயதிலேயே இழந்ததால் தனது தாத்தா பாட்டி வீட்டில் வசித்தார். அருகிலுள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீபிரியா 6-ம் வகுப்பு படித்துவந்தார். சுரேஷும் அவரது மனைவியும் திநகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணியாற்றுகின்றனர். குப்பனும் அவரது மனைவியும் வீட்டிலேயே பேச்சுலர்கள் சிலருக்கு சமைத்து போட்டு அதன்மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

நேற்று வழக்கம்போல் சுரேஷும் அவரது மனைவியும் வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் பேச்சுலர்களுக்காக குப்பனும் அவரது மனைவியும் சமையல் செய்துக்கொண்டிருந்தனர். ஸ்ரீபிரியா உள்ளறையில் வீட்டுப்பாடங்களை படித்துக்கொண்டிருந்தார்.

இரவு 8.30 மணி அளவில்  சமையல் செய்து கொண்டிருக்கும் போது பாத்திரத்தில் இருந்த எண்ணெய் தீப்பற்றி கேஸ் சிலிண்டரில் பட்டு தீ பரவியது. இதில் தீவேகமாக அணைக்கமுடியாத அளவுக்கு கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் தீயின் வெம்மை தாங்காமல் குப்பனும் அவரது மனைவியும் வெளியே ஓடிவந்துவிட்டனர்.

ஆனால் சிறுமி ஸ்ரீபிரியா உள்ளே சிக்கிக்கொண்டார். அவரால் வெளியே வரமுடியவில்லை. வீடு முழுதும் தீபரவிய நிலையில் அக்கம் பக்கத்தார் வீட்டின் பின் பக்கமாக சென்று அங்குள்ள ஜன்னலை உடைத்து உள்ளே இறங்கி ஸ்ரீபிரியாவை மீட்டனர்.

ஆனாலும் சிறுமிக்கு  இரு கால்கள், வயிறு, முகம் போன்ற முக்கிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் தி.நகரில் தீயணைப்பு நிலையதிலிருந்து வந்த தீயணைப்பு வாகனம் தீயை 9 மணிக்குள் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தது.

இதனிடையே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீபிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. சென்னையில் தீவிபத்தில் சிறுமி உயிரிழப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x