Published : 15 Sep 2014 11:27 AM
Last Updated : 15 Sep 2014 11:27 AM

நல்லாளுமை படைக்க ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும்: ஆளுநர் ரோசய்யா

நிர்வாகத்துறையில் நல்லாளுமை படைக்க ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் ஆளுமையில் உன்னத நிலை என்ற தலைப்பில் தேசிய அளவிலான நிர்வாகத்துறையினருக்கான மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கலந்துகொண்டு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: ‘தற்காலத்தில் மன அழுத்தம் அதிகமாகியுள்ளது. மனதை எப்போதும் லேசாக வைத்திருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் மனித் தன்மையைத் தான் மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதயத்தில் இருந்து நிர்வகிப்பது நல்ல சூழலை உருவாக்கும். உண்மையான தலைவர்கள் தன்னலமற்ற சேவையை செய்பவராக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் திறமை மட்டுமல்லாது, உடன் இருப்பவர்களின் திறமையையும் தலைவர்கள் வெளிக்கொண்டுவர வேண்டும்.

பிறரது முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒரே மாதிரி இருப்பவர் தான் உண்மையான தலைவர். அப்போது தான் நல்லாளுமை படைக்க முடியும். அதற்கு அனைவரும் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும்’ என்று ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார். பிரம்ம குமாரிகள் அமைப்பின் நிர்வாகத் துறை தலைவி அவிதேஷ்ஜி, அமைப்பின் தமிழக மண்டல ஒருங்கிணைப்பாளர் பீனா, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x