Published : 02 Jan 2019 03:54 PM
Last Updated : 02 Jan 2019 03:54 PM

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கை நாளை விசாரிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திமுக தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் 10 ஆம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 14 ஆம் தேதி. வாக்கு எண்ணிக்கை 31 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ள நிலையில், இத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது. 'கஜா' புயலால் திருவாரூர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் முறையீடு செய்தார்.

அவரது முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டு நம்பர் ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பியது. இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மனுத்தாக்கல் செய்த பின்பு, தேர்தல் ஆணையம் தொடர்பான வழக்குகள் எந்த அமர்வு விசாரிக்கும் என ஆராய்ந்து மதியம் தெரிவிப்பதாக நீதிபதிகள் கூறிய நிலையில், இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x