சென்னையில்  கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை பிடிக்க முயன்ற 2 போலீஸார் கை உடைந்தது

சென்னையில்  கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை பிடிக்க முயன்ற 2 போலீஸார் கை உடைந்தது
Updated on
1 min read

சென்னை டிபி சத்திரத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்ய துரத்திச் சென்ற போலீஸார் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்ததில் இரண்டுபேருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

செனாய் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் . இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு தீச்சட்டி முருகன் என்ற ரவுடியை கொலை செய்த வழக்கில் இவர் தேடப்பட்டு வருகிறார். இவரை தொடர்ந்து தேடிவந்த போலீஸார்  டி.பி சத்திரம் பரமேஸ்வரன் நகரில் ராஜேஷ் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்ததை அடுத்து டி.பி. சத்திரம் உதவி ஆய்வாளர் சுபாஷ், மற்றும் காவலர் மதியழகன்  இருவரும் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றனர்.

அங்கிருந்த ரவுடி ராஜேஷை வளைத்துப்பிடிக்க முயன்றனர். அப்போது ராஜேஷ் அவர்கள் இருவரையும் மிரட்டிவிட்டு தப்பிச் சென்றார். அப்போது அவரை பிடிக்க போலீஸார் முயன்றனர். அவர்களை தாக்கிவிட்டு ராஜேஷ் தப்பி ஓடினார்.

அவரை மோட்டார் சைக்கிளில் இருவரும் துரத்திய நிலையில் ஒரு கட்டத்தில் எஸ்.ஐ.சுபாஷ் ஓடிக்கொண்டிருந்த ராஜேஷை பாய்ந்து பிடிக்க முயன்றார். இதில் ராஜேஷ்மீது அவர் விழ மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மூவரும் கீழே விழுந்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய காவலர் மதியழகன், எஸ்.ஐ.சுபாஷ் இருவரும் காயமடைந்தனர். இருவருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும் தங்கள் காயத்தை பொருட்படுத்தாமல் துப்பாக்கி முனையில் ராஜேஷை அவர்கள் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

காயமடைந்த எஸ்.ஐ.சுபாஷ், காவலர் மதியழகன் இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in