தமிழகம் முழுதும் ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா: உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்

தமிழகம் முழுதும் ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா: உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் உள்ள 35,232 நியாய விலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் எனவும், இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளதாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ரேஷன் பொருட்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்ததாக பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை அபிராமபுரம் நியாய விலைக்கடை ஊழியர் கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சிவில் சப்ளை கார்பரேஷனின் நிர்வாக இயக்குநர் எம்.சுதாதேவி சார்பில்  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நடத்தப்படும் 1,455 நியாயவிலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரசிடமிருந்து நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்புதல் பெறப்பட்டவுடன் இந்த  கடைகளிலும் 20.80 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள், பெண்கள் சுய உதவிக்குழுக்கள், மீனவர் சங்கங்கள், நடமாடும் நியாய விலைக்கடைகள் என மொத்தமுள்ள 35,232 நியாயவிலைக் கடைகளில்  கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த ரூ. 97 கோடி செலவாகும் எனவும், இதுசம்பந்தமாக  அரசுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த பரிந்துரை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை 28ம் தேதி தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in