Published : 11 Sep 2014 10:14 AM
Last Updated : 11 Sep 2014 10:14 AM

கொலை வழக்கு: டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரஸிங் மூலம் விசாரணை

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான கொலை வழக்கு தொடர்பாக அவரிடம் வீடியோ கான்பரஸிங் மூலம் விசாரணை நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட இலங்கைத் தமிழ்ப் போராளி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 1986-ம் ஆண்டு தமிழகத்தில் தங்கியிருந்தனர். அப்போது 1.11.1986 அன்று சென்னை சூளைமேட்டில் இலங்கை போராளிக் குழுக் களைச் சேர்ந்த சிலர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். அதில் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்தார். ஏராளமானோர் படுகாயமடைந் தனர். இந்த வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுதலையான டக்ளஸ் இலங்கைக்கு சென்று விட்டார்.

அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணையில் அவர் ஆஜராகவே இல்லை. இதன் காரணமாக அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையை 1990-ல் சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்தது. தேடப்படும் குற்றவாளியாக 1994-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் டக்ளஸ் மனு தாக்கல் செய்தார். “தற்போதைய சூழ்நிலையில் நான் தமிழ்நாட்டுக்கு வந்தால் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழக் கூடும். எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

ஆகவே, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜர் ஆக நான் தயாராக உள்ளேன். அங்கிருந்து வீடியோ கான்பரஸிங் முறையில் என்னிடம் விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். எனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடி யாணையை திரும்பப் பெற வேண்டும்” என்று டக்ளஸ் தேவானந்தா தனது மனுவில் கூறியிருந்தார். எனினும் அவரது மனுவை தள்ளுபடி செய்து 2012-ம்

ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை 4-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் டக்ளஸ் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி சி.டி.செல்வம், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் பிறப்பித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

“மனுதாரர் இலங்கையின் அமைச்சராக உள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு அவர் அரசுப் பிரதிநிதியாக இந்தியா வந்தபோது அவரை கைது செய்ய போலீஸார் முயற்சி செய்யவில்லை. அவர் அமைச்சராக இருப்பதாலும், அண்டை நாடுகளுக்கு இடையே யான நட்புறவை கருத்தில் கொண்டும் கைது செய்ய முயற்சி செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகவும், அங்கிருந்து வீடியோ கான்பரஸிங் விசாரணையில் பங்கேற்க தயாராக இருப்பதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.

அவரது மனு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. வீடியோ கான்பரஸிங் மூலம் விசாரணை நடத்துவதற்காக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தேவைப்படும் நேரத்தில் மனுதாரர் ஆஜராக வேண்டும். விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டால், விசாரணை நீதிமன்றத்திலும் அவர் நேரில் ஆஜராக வேண்டும். அத்தகைய சூழலில் மனுதாரருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண் டும்” என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x