Last Updated : 02 Jan, 2019 08:35 AM

 

Published : 02 Jan 2019 08:35 AM
Last Updated : 02 Jan 2019 08:35 AM

அனுமதியின்றி உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி: பள்ளிக்கல்வித் துறை விரைவில் அரசாணை வெளியீடு

ஆசிரியர்களின் உயர்கல்விக்கு பின்னேற்பு அனுமதி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 38 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில் 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வி பணியாளர் இயக்குநரகத்தில் முன்அனுமதி பெற்று வந்தனர்.

இந்த முறையை மாற்றி, ஆசிரியர்களின் பணியிட மாறுதல் மற்றும் உயர்கல்விக்கான முன்அனுமதியை வழங்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி கடந்த மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

அதேநேரம், தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளாக உயர்கல்விக்கு அனுமதி கோரி விண்ணப்பித்த 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்னும் ஒப்புதல் தரப்படவில்லை. 2018 ஜூன் மாதத்துக்கு முந்தைய விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க முதன்மை கல்வி அதிகாரிகள் மறுக்கின்றனர். இனிமேல், முன்அனுமதிக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பணியாளர் இயக்குநரகமும் கைவிரிப்பதால், உயர்கல்வியை முடித்துவிட்ட பல ஆசிரியர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

ஆசிரியர்களின் உயர்கல்விக்கு தமிழக அரசு பின்னேற்பு அனுமதி வழங்க வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் சந்திரன் கூறியதாவது:ஆசிரியர்கள் ஒரே பதவியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்தால் தேர்வு நிலை, 20 ஆண்டுகள் முடித்தால் சிறப்பு நிலை வழங்கப்படுகிறது. அஞ்சல் வழியில் உயர்கல்வி படிக்க துறை அனுமதி பெற வேண்டும். உயர்கல்வி பயில முன்அனுமதி பெறும் அதிகாரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பிறகு, பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால் சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் உயர்கல்விக்கான முன்அனுமதி பெறும் ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.

ஒவ்வொரு மாவட்ட கல்விஅலுவலகமும் பல நடைமுறைகளை பின்பற்றுகின்றன. தேவையற்ற காரணங்களை கூறி விண்ணப்பங்களை திருப்பி அனுப்புகின்றன. இதனால் ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பலன்கள் தடைபட்டுள்ளன. எனவே, உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி வழங்க அரசு முன்வர வேண்டும். இதை ஜாக்டோ ஜியோவின் 7 அம்ச கோரிக்கைகளிலும் இணைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ விரைவில் போராட்டம் நடத்த உள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் நல்ல முடிவு கிடைக்காவிட்டால், போராட்ட அறிவிப்பை வெளியிட ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் விதமாக உயர்கல்விக்கு பின்னேற்பு அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் உயர்கல்விக்கு முன்அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். அதில் 70 சதவீதம் பேர் அரசின் அனுமதி பெறாமலேயே தங்கள் உயர்கல்வியை முடித்துவிட்டனர். இதனால், அவர்களுக்கான பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுக்கு வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, அனுமதி இல்லாமல் உயர்கல்வி படித்தவர்களுக்கு பின்னேற்பு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பலன் பெறுவார்கள். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x