

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப செய்ய வேண்டியது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு நேற்று இரவு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் தங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவுகள் ஏதும் பெறாத நிலையிலும் பெரும்பாலான ஆசிரியர்கள் பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 9 மணிக்குள் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடமும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடமும் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ, எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்-அப் மூலமாகவோ தகவல் தெரிவித்துவிட்டு உடனடியாக தங்கள் பணியிடத்தில் சேர்ந்து பணியை தொடரலாம்.
அவ்வாறு குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் ஆசிரியர்கள் பணியில் சேரவில்லை எனில் அப்பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த இடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.