Published : 20 Sep 2014 12:00 PM
Last Updated : 20 Sep 2014 12:00 PM

2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற பெண்கள் 12.6 சதவீதம்: குடும்பக் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை

திண்டுக்கல் அருகே 10 குழந்தை களின் தாய் 11-வது பிரசவத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து நடந்த கணக்கெடுப்பில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற பெண்கள், தமிழகத்தில் 12.6 சதவீதம், திண்டுக்கல் மாவட்டத்தில் 16.7 சதவீதம் பேர் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு உடனடியாக குடும்பக் கட்டுப்பாடு செய்ய சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

திண்டுக்கல் அருகே தோட்டனூத்தில் 10 குழந்தைகளின் தாய் சித்ரா, 11-வது பிரசவத்தில் மரணமடைந்தார். அவரும், அவரது கணவரும் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளாததால், இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற பெண்கள் மற்றும் அவரது கணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தமிழகத்தில் 12.6 சதவீதம் பெண்கள், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ளனர். திண்டுக்கல், பழனி உள்ளடக்கிய மாவட்டம் முழுவதும் 16.7 சதவீதம் பெண்கள், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ளதும், திண்டுக்கல் வட்டாரத்தில் மட்டும் 12.6 சதவீதம் பெண்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றிருப்பதும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கொடைக்கானல், நத்தம், பழநி, ஜக்கமன் நாயக்கன்பட்டி மற்றும் தாண்டிக்குடி, சிறுமலை மலைக்கிராமங்களில் 2 குழந்தை களுக்கு மேல் பெற்றுள்ள பெண்கள் அதிகம் உள்ளனர். இவர்களை தற்போது கண்டறிந்து அவர்களும், அவர்களுடைய கணவர்களும் குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளனரா? என அடையாளம் காணும் பணி தீவிரமாக நடக்கிறது.

இவர்களுக்கு, அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் செவிலியர்கள் கவுன்சிலிங் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 குழந்தைகளை பெற்றவர்களை குடும்பக் கட்டுப்பாடு செய்ய சுகாதாரத்துறை ஊழியர்கள் அணு கும்போது, அவர்கள் சிகிச்சை, கவுன்சிலிங்கிற்கு ஒத்துவராத பட்சத்தில் அவர்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு அனுப்பி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம்.’ என்றார்.

அதிகாரிகளிடையே பனிப்போர்

10 குழந்தைகளின் தாய் இறந்த விவகாரத்தில், பொது சுகாதாரத்துறை , மக்கள் நலப்பணிகள் துறை அலுவலர்களிடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இறந்த சித்ரா, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்ததால், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும், இதன் பின்னணியில் மக்கள் நலப்பணி துறை அதிகாரிகள் இருப்பதாகவும், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், மக்கள் நலப்பணித்துறை அதிகாரிகளோ, 10 குழந்தைகள் பெற்று 11-வது முறையாக சித்ரா கர்ப்பமடைந்த தகவலை ஏன் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் மறைத்தார்கள் என குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர், இரு துறை அதிகாரிகளையும் அழைத்து வரும் 23ம் தேதி விசாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x