Last Updated : 27 Sep, 2014 11:04 AM

 

Published : 27 Sep 2014 11:04 AM
Last Updated : 27 Sep 2014 11:04 AM

நகர்மயம், ரியல் எஸ்டேட் தொழிலால் பாதிப்பு: தமிழகத்தில் 4 ஆயிரம் நீர்நிலைகளை விழுங்கிய நகரங்கள்

நீர்நிலைகளின் தற்போதைய நிலை குறித்து, மாவட்ட வாரியான ‘அட்லஸ்’ விரைவில் வெளியீடு

நகர்மயமாதல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலால் தமிழகத் தில் ஏரி, குளம் போன்ற 4 ஆயி ரம் நீர்நிலைகள் அழிந்துவிட்டன. வருவாய் துறை ஆவணங்களைக் கொண்டு ‘செயற்கைக்கோள் படம்’ மூலம் காணாமல் போன நீர் நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன.

நீர்நிலைகளின் தற்போதை நிலை குறித்து அடுத்த 6 மாதங்களில் மாவட்ட வாரியான ‘அட்லஸ்’ (வரைபடம்) வெளியிடப் படவுள்ளது.

தமிழகத்தில் நீர்வளத்தைப் பாதுகாப்பதற்காக சங்க காலத்தில் இருந்தே ஏரிகள், குளங்கள், ஊருணிகள் வெட்டப்பட்டன. கிராமங்களில் ஊரின் நடுப்பகுதியில் பெரிய ஊருணி வெட்டி நிலத்தடி நீரைப் பாதுகாத்தனர். “கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பாசன ஏரிகள் உட்பட சிறியதும், பெரியதுமாக 43 ஆயிரம் ஏரி, குளங்கள் இருந்தன” என்கிறார் கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் சி.ஆர்.சண்முகம்.

ஆனால், “தமிழ்நாட்டில் தற் போது 13,779 பெரிய நீர்நிலைகள் உள்பட 39,202 நீர்நிலைகள்தான் உள்ளன” என்று பொதுப்பணித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்காக மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர் வதால் நகரங்கள் விரிவடைகின் றன. புறநகர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை மூடிவிட்டு மனைகளை ஏற்படுத்தி குடியிருப்புகளை கட்டுகின்றனர். விளை நிலங்களில் வீடு கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது அரசு. ஆனால், அந்த எச்சரிக்கையை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

இது தொடர்பாக அண்ணா பல் கலைக்கழக நீர்வள மையத்தின் கவுரவப் பேராசிரியர் சக்திவடிவேல் கூறியதாவது:

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்த 200 பாசன ஏரிகள் இப்போது 40 ஆக குறைந்து விட்டன. இப்படியே மாவட்டந் தோறும் ஏரிகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. மழைப்பொழிவு குறைவதால், சாகுபடி நிலங்களின் பரப்பளவு குறைகிறது. தண்ணீர் இல்லாத பல குளங்கள் குப்பை கொட்டும் இடங்களாக மாறிவிட்டன. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து வயலுக்கு உரமாகப் போட்டனர். ரசாயன உரங்களின் வரவால், வண்டல் மண் அள்ளுவது நின்றுபோய்விட்டது. இதனால் ஏரி, குளங்களில் வண்டல் மண் சேர்ந்து கொண்டே போய் அதன் பரப்பளவும், கொள்ளளவும் குறைந்துவிட்டது. கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் சிறியதும், பெரியதுமாக 4 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போய்விட்டன. சென்னை பெருநகர் மட்டும் 18 நீர்நிலைகளை விழுங்கியுள்ளது. நீர்நிலைகளின் அவசியம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றின் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றினால்தான், இருக்கின்றவற்றையாவது காப்பாற்ற முடியும் என்கிறார் சக்திவடிவேல்.

அண்ணா பல்கலைக்கழக தொலையுணர்வு மையத்தின் இயக் குநர் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மாவட்டம் வாரி யாக நீர்நிலைகளின் தற்போதைய நிலை குறித்து, வருவாய் துறை ஆவணங்களைக் கொண்டு செயற்கைக்கோள் வரைபடம் மூலம் ‘அட்லஸ்’ தயாரிக்க மத்திய அரசு எங்கள் மையத்துக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கியது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீர்நிலைகள் உள்ளிட்ட தகவல்களுடன் ‘அட்லஸ்’ தயாரிக்கும் பணியில் கடந்த 3 ஆண்டுகளாக 50 பேர் ஈடு பட்டுள்ளனர். ஏற்கெனவே தயாரிக் கப்பட்ட வரைபடங்கள் ஹைதரா பாத்தில் உள்ள தேசிய தொலை யுணர்வு மையத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் அனைத்து மாவட்டங்களின் ‘அட்லஸ்’ அனுப்பப்பட்டுவிடும். அதன்பிறகு தேசிய தொலையு ணர்வு மையம், கூகுள் போன்ற ‘புவன்’ (Phuvan) என்கிற தேடுதளத் தில் மாவட்ட வாரியான வரைபடங் களை வெளியிடும். அதில் மாவட் டம், வட்டம், கிராமங்களின் எல்லை, அங்குள்ள நீர் நிலைகளின் தற் போதைய நிலை, நில பயன்பாடு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என்றார் ராமகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x