Published : 24 Dec 2018 04:23 PM
Last Updated : 24 Dec 2018 04:23 PM

திருப்பூரில் பட்டப்பகலில் ஜோதிடர் வெட்டிக் கொலை; தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

திருப்பூரில் இன்று பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஜோசியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மங்கலம் அருகேயுள்ள பாரதி புதூரைச் சேர்ந்தவர் ஜே.ரமேஷ் (எ) குமார் (35). இவர் திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா நுழைவாயில் அருகே அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்து வருகிறார். இன்று (திங்கள்கிழமை) பகல் வழக்கமாக அமரும் இடத்தில் இருந்து ஜோதிடம் பார்க்கும் பணியில் இருந்துள்ளார்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி ஒருவர் வந்துள்ளார். வந்தவர் ரமேஷிடம் ஏதோ பேச, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரமேஷ் அங்கிருந்து புறப்பட்டு பென்னி வணிக வளாக சாலையில் தான் வழக்கமாக உணவருந்தும் உணவகத்தை நோக்கிச் சென்றுள்ளார்.

அதற்குள் மர்ம நபரும் தொடர்ந்து வாக்குவாதம் செய்தவாறே பின்னால் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த நபர் பைக்குள் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பொதுமக்கள் முன்னிலையிலேயே ரமேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

தொடர்ந்து அந்த நபர் தான் கையுடன் எடுத்து வந்திருந்த துண்டுப் பிரசுரங்களை சாலையில் வீசி சத்தம் போட்டவாறே அங்கிருந்து தப்பிச் சென்றார். அவர் வீசியெறிந்த துண்டுப் பிரசுரத்தில், தன்னுடன் சேர்ந்து வசித்து வந்த பெண்ணை ரமேஷ் பிரித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றிய திருப்பூர் வடக்கு போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x