Published : 21 Dec 2018 08:24 AM
Last Updated : 21 Dec 2018 08:24 AM
வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவதற்கு ஜெயலலிதா விரும்ப வில்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர் பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கடந்த 14 மற்றும் 18-ம் தேதிகளில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 3-வது முறையாக நேற்றும் ஆணையத்தில் ஆஜரான அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ராதா கிருஷ்ணனிடம் ஜன. 3-ம் தேதி கூடுதல் விசாரணை நடத்தப்படும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.
விசாரணைக்கு ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்தில் எந்த முரண்பாடும் இல்லை. மனசாட்சிக்கு உண்மையாக அனைத்து சிகிச்சைகளையும் ஜெயலலிதாவுக்கு அளித்தோம். வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று ஏன் சிகிச்சை அளிக்கவில்லை என்பதற்கான பதிலை அரசு சொல்லும். எனக்கு தெரிந்தவரை வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவதற்கு ஜெயலலிதா விரும்பவில்லை. ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தபோது எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்தோம்’’ என்றார்.
ஜெயலலிதாவின் தனிப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி, பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்த எம்.சுதாகர் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜராகியிருந்தனர். பல்வேறு விழாக்களில் பாதுகாப்புக்கு இவர்கள் உடன்சென்றபோது ஜெயலலிதா ஏதேனும் மருந்து உட்கொண்டாரா, ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது முதல்வருக்கான ஆம்புலன்ஸ் இருந்ததா, இருந் தது என்றால் அதில் ஏன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்பன தொடர்பாக இவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT