Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM
பேரிடர் காலங்களில் பயன்படுத்தவும், வீரர்களுக்கு சிறப்பாக போர் பயிற்சியளிக்கவும் இந்தியவிமானப் படையில் அதிநவீனவிமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று இந்திய விமானப் படை துணைத் தளபதி எஸ்.சுகுமார் தெரிவித்தார்.
இந்திய விமானப் படை தோற்றம் மற்றும் வளர்ச்சி, விமானப் படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர் களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத் தும் முகாம் சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படை பயிற்சி நிலையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. செப்டம்பர் 27-ம் தேதி வரை இம்முகாம் நடக்கவுள்ளது.
இந்திய விமானப்படை தளபதிஎஸ்.சுகுமார் முகாமை கொடி யசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
பேரிடர் காலங்களில் பயன்படுத்தவும், நமது வீரர்களுக்கு சிறப்பாக போர் பயிற்சியளிக்கவும் அதிநவீன விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அசாதாரண சூழ்நிலையில் நம் படையினருக்கு ஆயுதங்கள் வழங்குவது, தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சி-17 என்ற அடிப்படை ரக விமானம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஜெட் பயிற்சி விமானங்கள் வரும் ஆண்டுகளில் வாங்கப்படும்.
சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன கருவிகளை கையாள விமானப் படைக்கு தொழில்நுட்ப பட்டதாரிகள் அதிகமாக தேவைப்படுகிறார்கள். இந்த முகாமைக் காணும் இளைஞர்கள் இந்திய விமானப் படையில் அதிக அளவில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2017-ல் விமானப் படையில் ஆட்கள் பற்றாக்குறையே இருக்காது என்றார்.
இந்த முகாமையொட்டி தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி நிலையத்தில் சென்னை ஐஐடி மற்றும் இந்துஸ்தான் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராகிளைட்டிங், பாராசெயிலிங் சாகச பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
சாகசத்தில் கலந்து கொண்ட மாணவிகள் வி.ஸ்வர்ணா, பிரகதி ஆகியோர் கூறுகையில், ‘‘இந்த சாகச பயிற்சிகள் குறித்து படித்துள்ளோம். தற்போது, நாங்களே சாகசத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிப்பதுடன், சிறந்த அனுபவமாகவும் உள்ளது. வரும் காலத்தில் நாங்கள் இந்திய விமானப் படையில் சேர்ந்து சேவையாற்ற ஆர்வமாக உள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT