Published : 04 Sep 2014 12:00 AM
Last Updated : 04 Sep 2014 12:00 AM
எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
செப்டம்பர், அக்டோபர் எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வெழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்துக்கு இன்றும், நாளையும் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
சேவை மையங்கள் பற்றிய விவரங்களை தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) அறிந்துகொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125 உடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500/- மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- ஐ பணமாக சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.
8-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சிக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், அறிவியல் செய்முறைப் பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் தேர்வெழுதி தோல்வியடைந்த தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை சேவை மையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT