Published : 27 Dec 2018 10:56 AM
Last Updated : 27 Dec 2018 10:56 AM

நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான ரூ.3,776 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் வேலுமணி கோரிக்கை

டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, 14-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் தமிழக நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழக நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18 ஆண்டுக்காக 14-வது மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்த 2-வது தவணைத் தொகை ரூ.1,390.04 கோடியை வழங்குவதற்காக தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இத்தொகையை வழங்குவதற்காக தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு முதல்வர் மற்றும் தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில், 14-வது மத்திய நிதி ஆணையம் அளித்த பரிந்துரையின்படி 2017-18 ஆண்டுக்கான செயல்பாட்டு நிதி ரூ.560.15 கோடியும், 2018-19 ஆண்டுக்கான தமிழக நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை நிதி ரூ.3,216.05 கோடியும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கு தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக நிதி தேவைப்படுகிறது. எனவே, இந்த நிலுவைத் தொகையை வழங்க தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வலுவான, துடிப்பான, நவீன இந்தியாவை உருவாக்குவதில் மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு முன்னுரிமையும், ஆதரவும் அளித்து வருகிறது. இவ்வாறு மனுவில் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x